Sunday, January 18, 2009

செல் பேசும் தேவதை

வண்டியில் செல்லும் போது ரோட்டை தான் பார்த்து செல்ல வேண்டும். அது தான் நமக்கும், மற்றவர்களுக்கும் நல்லது. அப்படி தான் இது வரை வண்டியில் சென்று கொண்டு இருந்தேன். எனோ திடீர் என்று என் மனம் தடுமாற தொடங்கியது. ஒரு காற்று என்னை கடக்கும் போது தடுமாறியது நான் மட்டுமல்ல, என் வண்டியும் தான். சில விபரிதத்தை தவிர்க்க வண்டியை ஒரமாய் நிறுத்தி விட்டு நறுமணம் வீசிய காற்றை தேடினேன். அழகிய காற்றுக்கு சொந்தக்காரியை தேட எனக்கு அதிக நேர தேவைப்படவில்லை. அந்த சாலையோரம் தேவதை நீ மட்டும் தான் இருந்தாய்.

இந்த உலகத்தில் நீயும், நானும் மட்டும் தான் மனித இனத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் எல்லோரும் மிருக இனத்தை சேர்ந்தவர்கள் என்று தோன்றியது. அழகிய தேவதை கண் முன் வந்து விட்டால் ‘மெல்லிய மணம்’ கிறுக்கு தனமாக யோசிக்கும் என்று நினைக்கிறேன். எல்லோரையும் மிருக இனத்தில் சேர்த்து விட்டு எப்படி நம்மை மட்டும் மனித இனத்தில் சேர்த்துக் கொண்டேன் என்று எனக்கே புரியவில்லை. நீ நடந்து செல்வதை மறைப்பது போல் ஒரு சிலர் நடப்பதால் என் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம். ஆனால், நீ, நானும் ஒரு தனி உலகத்தில் வாழ வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

உன்னை பின் தொடர எனக்கு விருப்பமில்லை. ஆனால், உன் காற்று என் மேல் வீசியதால் நான் உன்னை பின் தொடர்வதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. நீ ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்தாய். நம் முதல் சந்திப்பு அங்கு தான் தொடங்க வேண்டும் என்றால் யாரால் அதை மாற்ற முடியும். உன் பார்வை என் மீது படும்ப்படி நான் சற்று தொலைவில் அமர்ந்தேன். நீ என்னை பார்க்க மாட்டாயா என்று ஏங்கிய படி ஒரு காபியை கொண்டு வர சொன்னேன். நீ கண்ணத்தில் கை வைத்துக் கொண்டு, லேசாக தலை அசைத்து என்னை பார்த்து சிரித்தாய். ‘இன்ப அதிர்ச்சி’ என்று சொல்லுவார்களே அது இது தானா ! பழகிய முகத்தை பார்த்து சிரிப்பது போல் என்னை பார்த்து சிரித்திருக்கிறாய் ! ஒரு வேளை முன் ஜென்ம பந்தம் என்பார்களே இது தானா ? எனக்கு தோன்றிய அதே ஈர்ப்பு உனக்கும் தோன்றி இருக்க வேண்டும். அதனால் தான் நீ என்னை பார்த்து சிரித்தாய்.

"பெண்கள் சிரிப்பு பல அர்த்தம் உண்டு" என்று உள்ளூர ஒரு குரல் கேட்டது. அந்த குரல் என் மனசாட்சிக்கு சொந்தமானது. தேவதை பார்த்த பிறகு திருக்குறளை மறப்பவர்கள் மத்தியில் என் குரலை நான் மறப்பது தவறில்லையே !! என்னை பார்த்து எதோ வார்த்தை சொல்லி சிரித்தாய். உன் கண் இமைகளும் என்னை பக்கத்தில் வர அழைத்தது. “எந்த பெண்ணாவது தனியாக பேசுவாளா ! உன்னை தான் அழைக்கிறாள் போ" என்று இன்னொரு குரல் என் மனதில் கேட்டது. மூன்று அடி தூரத்தில் நீ செய்யும் ஒவ்வொரு செய்கையும், என் மனம் மூன்னூறு அடி வானத்தில் பறக்கிறது. என் ஆர்வம் என்னை இறுக்கையில் அமரவிடவில்லை. என் கால்கள் உன்னை நோக்கி நடக்க துவங்கின.

நான் உன் அருகில் வந்ததும், நீ “ஒரு ப்ளைன் தோசை" என்றாய். நான் இந்த உணவு விடுதியில் வேலை செய்பவன் அல்ல, உன் காற்றில் கரைந்து போனவன் என்று சொல்ல துடித்தேன். நான் பேச தொடங்கும் முன்பு உன் கையை கண்ணத்தில் இருந்து எடுத்தாய். அப்போது தான் நான் புரிந்து கொண்டேன், இது வரை நீ பேசி சிரித்தது 'Wi-Fi' செல்போனில் என்று.

முதலில் 'Wi-Fi' போனில் பேசுபவர்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். இவர்கள் போனில் பேசுகிறார்களா, தனியா பேசுகிறார்களா என்று ஒன்றும் புரியவில்லை. அவள் பைத்தியமோ இல்லையோ, அவள் பின்னால் சென்ற நான் பைத்தியக்காரன் என்ற எண்ணத்துடன் அந்த உணவு விடுதியை விட்டு வந்தேன்.

Wednesday, January 07, 2009

ஆங்கிலம் பேசும் தேவதை

இதோ இங்கு எனக்காக தேவதை.... தமிழ் அறியாதவள். ஆனால், தமிழர்கள் மனதை கொள்ளை அடிப்பவள். அவள் தமிழ் பேசி தான் தமிழன் மனதில் இடம் பிடிக்க வேண்டுமா ? பார்வை போதுமே ... எல்லோரையும் சாய்த்து விடுவதற்கு.... அது என்ன தமிழன் மட்டுமா அவள் அழகில் விழுவான். ஆண்மையற்றவனுக்கு கூட பார்வையால் ஆண்மை ஊட்டுபவளாயிற்றே... உலக ஆண்கள் எல்லாம் அவள் பார்வையில் விழுந்து விடுவார்கள்.

எத்தனையோ அரங்கத்தில் தலை நிமிர்ந்த தமிழ் ... இன்று முதன் முதலில் வெட்கம் பட்டிருக்கும்... உன் நாவில் நுழையாததால். நான் அதிகமாக ஆங்கிலம் பேசியதில்லை. அதற்கு இன்று தான் வருந்துகிறேன். நீ பேசுவதை எனக்கு புரிந்தும்.... என்னால் கோர்வையாக பதிலளிக்க முடியவில்லை. உன்னிடம் பேசும் போது என் மனம் எண்ணங்களோடு சண்டைப் போடுவது போல் ஆங்கிலம் என் நாவிடம் சண்டை போடுகிறது.

நான் தமிழிலே கவிதை எழுதி பழகிவிட்டேன்..... என் தமிழ் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருவாயா ? என்று கேட்கிறாய். ஆங்கிலத்தில் எழுத்துக்களை கோர்த்து எழுத தெரிந்திருந்தால்... நான் உனக்காக ஆங்கிலத்திலேயே கவிதை எழுதியிருப்பேன்.

“தமிழ் இனி மெல்ல சாகும்” என்று எந்த கவிஞன் சொன்னான். உனக்காக தமிழ் சாவை ஏற்றுக் கொள்ளும்... தமிழில் நீ பேசுவதாக இருந்தால்.

என் தேவதை உனக்காக எத்தனை கவிதை வடித்திருக்கிறேன் தெரியுமா..? ஆனால் உன்னால் ஒன்றை கூட வாசிக்க முடியாது.

30 நாட்களில் ஆங்கிலம் கற்று தருகிறோம் என்ற சாலையோர விளம்பரத்தை பார்த்தேன். உன்னிடம் தெளிவாய் ஆங்கிலம் பேசவே அங்கிலம் கற்று வகுப்பிற்கு சேர்ந்தேன். அவர்கள் கற்று தரும் ஆங்கிலம் எனக்கு உதவாது என்று பின்பு தான் அறிந்தேன்.

நான் ரயில் வேகத்தில் ஆங்கிலம் பேசினால்.... நீ விமான வேகத்தில் பேசுகிறாய். நான் ஆங்கிலம் பேசுவதே மிக பெரிய விஷயமாக இருந்தது.... இப்பொது வேகத்தை கூட்ட வேண்டுமா ? என்றே பயந்தேன். எத்தனை பேர் காதலுக்காக வானத்தையே வலைப்பதாக சொல்வார்கள். நான் உனக்காக என் ஆங்கிலத்தின் வேகத்தை அதிகப்படுத்தாமலா இருப்பேன்.

தினமும் தமிழை மட்டுமே உச்சரித்த என் நாவு.... உன்னிடம் ஆங்கிலத்தில் பேச ஒத்திக்கை பார்த்துக் கொண்டது. தமிழில் இருக்கும் உச்சரிப்பு கடினம் இதில்லை.... இருந்தும் உன்னை பார்த்தால் என் நாக்கு குழைகிறது. பரவாயில்லை..... என் தவறுகளை சரி செய்ய நீ இருக்கிறாயே.... என் குழைந்த நாக்கை சரி செய்ய நீ இருக்கும் போது என் நாக்கு எப்படி குழைந்தால் எனக்கென்ன ?

Monday, December 29, 2008

வருக 2009

எழுந்த பெட்ரோல் விலை குறையட்டும்
வீழ்ந்த பொருளாதாரம் எழுகட்டும் !

பங்கு சந்தைகள் ஏறட்டும்
பணவீக்கம் தணியட்டும் !

நித்தம் ஒரு குண்டு என்ற
நிலைமை மாறட்டும் !
நிம்மதியாய் மக்கள்
பெரும் மூச்சு விடட்டும் !

போருக்கு அஞ்சும் அரசியவாதிகளை
வரும் ஆண்டு மாற்றட்டும் !
மரணம் என்பது பொதுவென்று
எதிரிக்கு நம் படை காட்டட்டும் !

இடிந்த போன தமிழீழம்
இனி மேலாவது வாழட்டும் !
இலங்கையின் அரசியலுக்கு
இயற்கை பதில் சொல்லட்டும் !

ஈழத்தை பற்றி பேசும் போது
காதை கூர்மையாய்
தண்ணீர் பற்றி பேசும் போது
மந்தமாய் கேட்கும் காதுகள்
தெளிவாய் கேட்கட்டும் !

மரங்களாக வாழ்ந்த தமிழர்கள்
புத்தாண்டில் மனிதனாக வாழட்டும் !

('கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூல் வெளியீட்டு விழாவில் சொன்ன கவிதை )

Friday, December 19, 2008

என் பார்வையில் அண்ணா

பகுத்தறிவு பெரியார் பேச்சில் - செருப்பை
பரிசாய் பெற்ற போது…
பக்குவமாய் பேசி - மக்களிடம்
பல கை தட்டல்கள் பெற்றவர் !

பயணங்களில் நண்பர்களை தவிர்த்து
புத்தங்களை நண்பர்களாக கொண்டவர் !
பதவி வந்ததும் தன் சம்பளத்தை
பாதியாய் குறைத்து ஆடம்பரத்தை தவித்தவர் !

சுயமரியாதை திருமணத்தை
சட்டமாய் அரங்கேற்றியவர் !
சென்னைக்கு ‘தமிழ் நாடு’ பெயரிட்டு
சரித்திரப் பக்கங்களில் முத்திரை பதித்தவர் !
தள்ளி இருந்த திருவள்ளுவரை
திரும்பும் அரசு அலுவலகத்தில் மாட்டியவர் !
பேச்சும், எழுத்தும் தன் கட்சியின்
பெரும் சொத்தாக கருதியவர் !

நித்திரை பொழுதிலும்
முத்திரை பேச்சால்
ஒவ்வொரு இரவும் நினைவில் நின்றார் !
தீ பறக்கும் முயற்சியால்
தமிழர்கள் இல்லங்களில்
தீபங்கள் ஏற்றினார் !

'அண்ணா' என்ற உறவு
அண்ணாதுரை பெயரால் சிறப்பானது !
திராவிடக் கழகத்தால்
தமிழனின் முத்கெலும்பு நிமிர்ந்தது !

நூறு கவிஞர்கள் எழுதிய 'கவிஞர்களின் பார்வையில் அண்ணா' என்ற தொகுப்பு நூலில் இக்கவிதை இடம் பெறுகிறது.

Wednesday, December 17, 2008

ஞாபகங்கள்

பள்ளி பருவத்தில் பிரிந்த தோழனை
நடு சாலையில் அழுது வாங்கிய பொம்மை
விளையாட்டில் நண்பனிடம் போட்ட சண்டை
தந்தை கரம் பிடித்து நடந்த நடை
நினைத்தால் நரம்புகளும்
நவரச கீதம் பாடும் ஞாபகங்கள் !

பகைமை தூண்டிவிடம் நினைவுகள்
காமத்திற்காக காதலிக்கும் காதலர்கள்
கருணை மறந்த கள்வர்கள்
கர்மத்தை செய்து காலத்தை ஓட்டுபவர்கள்
நினைத்தால்
நித்திரை கெடுக்கும் ஞாபகங்கள் !

மறதியை பரிசளித்த இறைவனே
தேவையில்லாவற்றை அழித்து விட்டு
தேவையானவற்றை நினைவுப் படுத்த....
கணிப்பொறிப் போல்
மனதை படைத்தால் என்ன ?

தேவையில்லாத ஞாபகங்களின்
உன் ஞாபகத்தை மறந்தேன் !
பல மதக்குழப்பத்தில்
நீயும் என் ஞாபகத்தை மறந்தாய் !

மறதிலும் இறைவன்
ஞாபகமாய் சொன்னான் -

“மறதி மனிதனுக்கு மட்டுமல்ல
மகேஸ்வரனுக்கும் பொதுவென்று”

அறிமுகம்

கருவில் வந்த குழந்தைக்கு
அன்னையின் ஸ்பரிசம் அறிமுகம் !
உறவினர்கள் தீண்டலில்
குழந்தைக்கு கண்ணீர் அறிமுகம் !
கண்ணீர் சிந்தி செல்லும் போது
பள்ளிக்கூடம் அறிமுகம் !
விளையாட்டில் நண்பர்களிடம்
போடும் சண்டை அறிமுகம் !

கன்னியிடத்தில் வரும்
முதல் காதல் அறிமுகம் !
ஜனனம் வாழ்க்கையின்
தொடக்கத்தின் அறிமுகம் !
மரணம் வாழ்க்கையின்
முடிவில் அறிமுகம் !
மற்ற அறிமுகங்கள் வரும் நாட்களில் ...
பழகிய முகம் !

முதல் தேர்வு
முதல் போட்டி
முதல் காதல்
முதல் முயற்சி
அனைத்திலும் வென்றவர்
வரலாறு படைப்பதில்லை !

தோல்வியின் அறிமுகத்திற்கு அஞ்சினால்
வெற்றியின் அறிமுகம் கிட்டாது !
வெற்றி கிட்டும் வரை
உன் பிறப்புக்கு மதிப்பு கிடையாது !

மரணத்திற்கு நீ அறிமுகம் ஆகும் முன்பு
உலகிற்கு அறிமுகம் ஆகிவிடு !

உலகிற்கு நீ அறிமுகம் ஆகும் போது
உன் வெற்றி மட்டுல்ல ...
தோல்விகளுக்கும் வரலாறு ஆகும் !

ஓவ்வொரு தோல்வியில் கற்றுக்கொள் !
வெற்றிக்கு அறிமுகம் ஆகும் வரை
தோல்வியை ஏற்றுக்கொள் !

Monday, December 15, 2008

தொலைப்பேசி தேவதை

கடன் அன்பை முறிக்கும் என்பார்கள். ஆனால், கடன் கொடுப்பாதற்காகவே நீ என்னை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டாய்.

" நாங்க XXX வங்கியில இருந்து பேசுறோம். உங்க சம்பள தகுந்த மாதிரி உங்களுக்கு Personal loan தரோம். உங்களுக்கு லோன் வேணுமா...?" - இரண்டே வரியில் முடிந்தது உன் குரல்... இல்லை உன் குறள்.

என்னை கடனாளியாக்குவதில் உனக்கு எத்தனை ஆசையோ ? இது போன்ற தொலைப்பேசிகளை துண்டிப்பவன் நான். ஆனால், உன் குரலை மீண்டும் கேட்பதற்காகவே மீண்டும் மீண்டும் உன் வங்கியின் கடன் விபரங்களை பற்றி கேட்டேன். என்னை கடனாளியாக்கும் ஆர்வத்தில் நீயும் உன் வங்கியின் கடன் விபரங்களை பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறாய்.

அப்துல் கலாமின் "தொலை நோக்குப் பார்வை 2020" படித்திருக்கிறேன். ஆனால் தொலைப்பேசி தொடர்புக் கொள்ளும் தேவதை உன் முகம் பார்க்க முடியவில்லை. தொலைப்பேசியில் தினமும் இது போன்ற தொல்லை கொடுப்பாயா ? என்ற கேட்க தோன்றியது.

பணத் தேவை இல்லாத போதும் உன் முகம் பார்ப்பதற்காகவே உங்கள் வங்கியின் சேவையை விரும்பினேன். இதற்காக தான் பெண்களை வைத்து தொலைப்பேசியில் அழைக்க சொல்கிறார்களோ ? அதன் பிறகு நீ கேட்ட கேள்விகள் எல்லாம் என் மனதிலே நிற்கிறது.

உங்களுக்கு எவ்வளவு சம்பளம் ? எங்க வேலை செய்றீங்க ? இதுக்கு முன்னாடி வேற எந்த பேங்க்ல லோன் வாங்கினிங்கலா ? உன் கேள்வி தனைகளை நீ தொடர்ந்துக் கொண்டே போனாய்.

நீ கேட்கும் கேள்விகள் எல்லாம் வங்கி கடன் கொடுப்பதற்காக கேட்பது போல் தெரியவில்லை. என் வாழ்க்கை துணையாக வருவதற்கு கேள்வி கேட்பது போல் இருந்தது.

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் தொலைப்பேசியில் தொடர்ப்புக் கொள்வது. உன்னை பார்க்கும் ஆசை மனதில் துளிர் விட தொடங்கியது. உனக்காகவே உன் வங்கியில் கடன் வாங்க சம்மதித்தேன்.

என் அலுவலகத்திற்கு ஒருவன் வந்து உன் வங்கியில் இருந்து வருவதாக சொன்னான். உன் வங்கி மிகவும் மோசம். தொலைப்பேசியில் பெண்களை பேசவிட்டு நேரடி தொடர்புக்கு ஆண்களை நியமித்து இருக்கிறார்கள். வந்தவன் நீ தொலைப்பேசியில் சொன்ன உன் வங்கி விதி முறைகளை சொல்லிக் கொண்டு இருந்தான். உன் குரலின் நினைவில் நான் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்தேன்.

மனமோ உன்னை பார்க்க புலம்பியது. என்னால் எனக்கே ஆருதல் சொல்ல முடியவில்லை. என்னை சந்திக்க வந்தவன் வங்கி முகவரி கொடுத்து சென்றான். உன் முகம் காண உன் வங்கி முகவரிக்கு வந்தேன். உன் பெயரை சொல்லி உன் இருப்பிடத்தை கேட்டேன். அதோ அங்கு இருப்பதாக ஒருவர் சொல்ல, சற்று அதரிந்தே உன்னை பார்த்தேன். கோயில் சிலையாக இருக்க வேண்டியவள் வங்கி ஊழியராக இருப்பாதா ? உனக்கும் சேர்த்து என் ஒருவன் வருமானம் பொதும். "வேலையை விட்டு வா" என்று செல்ல என் நாவு துடித்து. அறிமுகம் இல்லாதவனின் வார்த்தையை நீ எப்படி நம்புவாய். இதோ என்னை உனக்கு அறிமுகம் படுத்த என் கால்கள் உன்னை நெருங்க தொடங்கியது.

உன்னை நெருங்கியதும் என்ன பேசுவது என்று தெரியாமல்.... அங்கு இருக்கும் வங்கி ச்சலானை எடுத்து வந்துவிட்டேன். உன்னிடம் பேச மனதில் ஆசையிருக்கும் அளவிற்கு பேசும் வார்த்தைகளில்லை. நீ குரலில் குயில் என்றால், நிறத்தில் முயல் என்று தான் சொல்ல வேண்டும். அந்த நிறமே என்னை பேசவிடாமல் செய்து விட்டது.

உன் வரவுக்காக உன் வங்கி வாசலில் காத்துக் கொண்டு இருந்தேன். உன் அழகில் அதிர்ந்தவனை இன்னொரு அதிர்ச்சி கொடுப்பாய் என்று நினைக்கவில்லை. என் அலுவலகத்திற்கு வந்து உன் வங்கியை பற்றி பேசியவனுடன் வந்துக் கொண்டு இருந்தாய். என் கண் முன்னே நீ அவன் வண்டியில் ஏறி சென்றாய். ஒரு நாள் உன் குரலை கேட்ட எனக்கே உன் மீது ஆசை வரும் போது தினமும் உன்னை பார்ப்பவனுக்கு ஆசை வராதா.....? அவன் எனக்கு முன்பே உன்னை பார்த்ததால் அவன் உன் காதலை வென்று விட்டான். நான் உன்னை பார்ப்பதில் பிந்திக் கொண்டதால்.... நீங்கள் போவதை பின்னாடி இருந்து பார்க்கிறேன்.

Friday, December 12, 2008

மனித உரிமை

மனிதனுக்கு ஓட்டுப்போட உரிமை உண்டு
தேர்ந்து எடுத்த தலைவரை
நீக்க உரிமை இல்லை !

தவறு செய்ய உரிமை உண்டு
தட்டிக் கேட்பவரை வெட்டுப்படுவதால்
நியாயம் கேட்க உரிமை இல்லை !

பிள்ளைகளைக் கருவில் சுமக்க உரிமை உண்டு
லட்சங்கள் இல்லாமல்
கல்லுரியில் சேர உரிமை இல்லை !

மேல்நிலைப் பள்ளி வரை
படிக்க உரிமை உண்டு
ஜாதி இல்லாமல் பள்ளியில்
சேர்க்க உரிமை இல்லை !

போர் நடக்கும் போது
மனித உரிமைகள் பறிக்கப்படும்
-அது இந்திய அரசியல் சட்டம் !

போர் நடக்காத போது
மனித உரிமைக்ள் மீற்ப்படும்
-இது துரோகிகளின் திட்டம் !

மனித உரிமைகள் பறிக்கப்படவில்லை
மனித உரிமைகள் மீறப்படுகின்றன !!

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" கவிதை நூலின் 9வது கவிதை
Free Web Counters
வந்தவர்கள்