Friday, October 31, 2008

அழகு

கவிதை பாடும் கவிஞனுக்கு
பார்க்கும் இயற்கை எல்லாம் அழகு !
தமிழ் கற்ற புலவனுக்கு
தமிழ் வார்த்தை ஒவ்வொன்றும் அழகு !
பசி வந்த மனிதனுக்கு
பார்க்கும் உணவெல்லாம் அழகு !
இதயம் தேடும் இளைஞனுக்கு
கன்னியரின் காதல் அழகு !

கோடி நட்சத்திரங்களின் நடுவில்
நிலவு ஒன்று தான் அழகு !
மொழிகளின் வார்த்தைகள் தெரியாமல்
மழலை பேசும் மொழி அழகு !
ஆடவரை மயக்கும் வேல்விழி இருந்தும்
கன்னிக்கு மை இடுவது அழகு !
பொன் நகையால் அலங்கரிக்கப்பட்டாலும்
பெண்ணுக்குப் புன்னகை அழகு !

உழைக்கத் தெரிந்த மனிதனுக்கு
வெற்றி பெறுவதே அழகு !
பத்து மாதம் கருவில் பிறந்த
குழந்தையின் கண்ணுறக்கம் அழகு !
அழகான பொருளை எல்லாம்
ரசிக்கும் நாட்கள் அழகு !
அழகை ரசிக்கும் போது மரணம் வந்தால்
அந்த மரணம் கூட அழகு !

அழகில்லை என்று
காதலைச் சொல்லாமல்
கண்ணீர் சிந்தும் நண்பா !
உன் கண்ணீர் துளியும் அழகு !
இந்த கண்ணீரை அவள் துடைத்தாள்
அந்த அழகி உனக்கு மட்டுமே அழகு !
காதலிக்காகக் காத்திருக்கும்
அழகான நாட்கள் அழகு !

நண்பா !
காத்திருப்பது
உண்மை காதலுக்கு அழகு !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலின் 14வது கவிதை

Sunday, October 12, 2008

வெற்றி நிச்சயம்

தனக்குத் தானே நண்பனாய் இருந்து
முன்னேற வேண்டிய மனிதன் !
தனக்குத் தானே கடவுளாய் இருந்து
தன் மரணத்தை தீர்மானித்துவிட்டான் !

தற்கொலைக்கு துணிந்தவனே
இதோ வழிப்போக்கனின் வார்த்தைகள்
ஏதேனும் காதில் வீழுந்தால்
முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் !

உன் உடலை எரித்தால்
உன் உடல் சாம்பலாய் வாழும் !
உன் சாம்பல் ஆற்றில் கரைத்தால்
ஆற்று மண்ணாக மாறும் !
உன்னைப் புதைத்தால்
எலும்பாய் மண்ணில் புதைந்து கிடக்கும் !

உயிரற்ற பொருளாய்
வாழ முடிந்த உனக்கு !
உயிருள்ள மனிதனாய்
வாழவும் முடியும் !

விரக்தி - அது வந்து செல்லும் காற்று
தோல்வி - காலப்போக்கில் தொலைந்துவிடும்
துயரம் - சில வினாடியில் மறைந்துவிடும்
மரணம் - வாழ்க்கையில் இறுதியாக வரும் விருந்தாளி!
விருந்தாளியை வரவேற்பது தான் முறை
தேடிச் செல்வது முறையல்ல !

வானத்தில் பறப்பது பறவை என்றால்
வானத்தில் பார்க்காத கோழியை என்ன சொல்வது ?
தண்ணீரில் வாழ்வது மீன் என்றால்
டால்பினை மிருக இனத்திலா சேர்ப்பது ?

வெற்றி காண்பவனும் மனிதன் என்றால்
தோல்வி காண்பவன் மரணத்தையா தேடுவது ?
உயிரற்ற பொருளாய் வாழ்வதைவிட
பல தோல்விகள் கண்ட மனிதனாய் வாழு !

இந்த தோல்விகள்
நிச்சயம் ஒரு நாள்
வெற்றியின் கதவைத்தட்ட வைக்கும் !

Sunday, October 05, 2008

சிவப்பு ரோஜா

காதலுக்கு பச்சைக் கொடி காட்ட
காதலியிடம் சிவப்பு ரோஜா !
நண்பா !
இது அபாய அறிகுறி !
அவளிடம் கேட்டுத் தெரிந்திக்கொள்
அந்த ரோஜா
உனக்கா இல்லை
உன் கல்லறைக்கா என்று !

Thursday, October 02, 2008

என் செல்லரித்த கவிதைகள்

என் பழைய புத்தங்களை
தூசு தட்டிக் கொண்டுருந்தேன்
திடீர் விருந்தாளிப் போல் கிடைத்தது
செல்லரித்துப் போன
என்னுடைய கிறுக்கல்கள்
இல்லை...
என்னுடைய கவிதைகள் !

என் வயதான கவிதைக்கு
நானே ரசிகனானேன்
வயதான கிழவி
பதினாறு வயது பருவ பெண்ணாக
என் கண்ணுக்குத் தெரிந்தாள் !

என் காலசக்கரத்தை
ஒரு முறை ஓட்டிப்பார்த்தேன்...
வகுப்பறையில் கவிதை எழுதிய
நாட்களை நினைத்துப் பார்க்க..!

சில கவிதைகள்
என் நண்பர்களின் காதலுக்கு
உதவுவதற்காக எழுதியது !
இன்னும் சில கவிதைகள்
பக்குவமில்லாத
என் காதலைப் பற்றி எழுதியது !
ஒரு சில கவிதைகள்
என் தோழிகளை பொய்யாக
வர்ணித்து எழுதியது !
மூன்று கவிதைகள்
எனக்கு பரிசு
வாங்கி கொடுத்தது !

என் கவிதையின் பிழையை திருத்திய
தமிழ் ஐயா நினைவுக்கு வந்தார் !
என் கவிதையை ரசிக்கும்
தோழிகள் மின்னலாய் வந்தனர் !
காதலிக்கு கவிதை கேட்ட
நண்பர்கள் அலையாய் சென்றனர் !

பல முறை நினைத்துப் பார்த்தும்
வாழ்ந்த நாட்கள் தான் நினைவுக்கு வந்தது !
மீண்டும் அந்த நாட்கள் சென்று
வாழ முடியவில்லை !

தூசு தட்டி விட்டு
பழைய புத்தகங்களை
இருக்கும் இடத்தில் வைத்துவிட்டேன்
மீண்டும் செல்லரித்துப் போவதற்கு !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலின் 18வது கவிதை
Free Web Counters
வந்தவர்கள்