Friday, July 25, 2008

காதல் மௌனம்

உன்னை மகிழ்விக்க
நான் நடனம் கற்றுக் கொண்டேன் !
உன் அழகை வர்ணிக்க
கவிதை எழுத கற்றுக் கொண்டேன் !

உன் அழகை வரைய
நான் ஒவியம் கற்றுக் கொண்டேன் !
உன் துன்பத்திற்கு ஆறுதலாக
நான் பாடக் கற்றுக் கொண்டேன் !

உன் கை வலிக்கும் என்று
நான் சமைக்கக் கற்றுக் கொண்டேன் !
ஆனால் உன்னிடம் காதல் சொல்ல
நான் எப்படி கற்றுக் கொள்ளப் போகிறேன் ?

நான்கு மொழிகள் கற்று அறிந்தவன் நான்
எந்த மொழிகளும் உதவவில்லை
உன்னிடத்தில் என் காதலை சொல்ல....

ஒவ்வொரு மொழிகளிலும் வார்த்தைகள் தேடுவதால்
என் மௌனம் மொழியாக மாறாவில்லை !

கணிப்பொறி வினாவுக்கு
விடை அளிப்பவன் நான்
என் காதலின் வினாவுக்கு
உன் விடை கேட்க உதடுகள் அஞ்சுகின்றன !

பார்த்தவுடம் காதல் சொல்லி
வாழ்ந்தவர்கள் மத்தியில்
கனவில் உன்னுடன் வாழ்ந்தும்
காதலை சொல்ல மன வரவில்லை !

கணிப்பொறியில் காதல் செய்யும் காலத்தில்
இன்னும் கவிதையில் காதல் செய்கிறேன்
இன்னும் என் மொழிக்கு வார்த்தைகள் கிடைக்காததால்...!

Friday, July 18, 2008

மகாத்மாவுக்காக அழுகின்றேன்

நூறு வயது கடந்த
மகாத்மா உன்னை அழைக்கிறேன்
என் சோகத்தை உன்னிடம் கூற...!

வெள்ளையரை விரட்டிய
நூறு வயது இளைஞனே !
உன் மண்ணில் பிறந்த இளைஞர்கள்
மத வெறி மிருகங்களாக மாறிவிட்டார்கள்
அவர்களுக்காக நான் அழுகின்றேன் !

அன்று !
ஆப்பிரிக்கா இரயில் பெட்டியில்
வெளியே தள்ளப்பட்ட இளைஞன்
துடித்து எழுந்தான்
புரட்சி பிறந்தது !

இன்று !
மதத்திற்காக
ஒர் இளைஞன் துடித்து எழுந்தான்
குஜராத்தில்
புதிய ( இரத்த) ஆறு பிறந்தது !

மகாத்மா !
உனக்காக நான் அழுகின்றேன் !
நீ சிந்திய இரத்ததில்
சுதந்திரம் கண்டோம் !
பலர் இரத்தம் சிந்திக் கொடுத்த
குஜராத் பூகம்ப நிவாரணநிதி
குஜராத் மதக்கலவரத்தால்
மீண்டும் இரத்தமாக மாறிவிட்டது !
அங்கு சிந்தும் இரத்த வாடை
தமிழகத்தில் வீசுகிறது !
மீண்டும் உன் மண்ணில் பிறந்து
உன் மக்களிடம் இருந்து
உன் மண்ணைக் காப்பாற்று !

மகாத்மா அழுதார்
மீண்டும் அந்த மண்ணில் பிறப்பதற்கு !
மகாத்மா தன் சோகத்தை முறையிட
அயோத்தி ராமனிடம் சென்றார்
அவரிடம் கூற மறந்து விட்டேன்
இன்று டிசம்பர் ஆறு என்று !
அயோத்தி ராமனோ !
தலைமறைவாகி விட்டான் !
அங்கு பார்த்த கலவரத்தில்
மகாத்மா மீண்டும்
விண்ணுலகம் பறந்தார் !
இறுதியாக அவர் கூறிய வார்த்தை
" ஹே ! ராம்
உனக்குக் கூட என் நிலைதானா ! "

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் இருந்து முதல் கவிதை (2003)

Thursday, July 17, 2008

முடிவடையாத கவிதை (கலவரம்)

டிசம்பர் ஆறு அன்று
தொலைந்த போன
அல்லா ! ராமா !
அயோத்தி மக்களைக் காப்பாற்ற
உங்கள் இடத்தை நிரப்ப
வேறொரு இறைவனைத் தேடுகிறேன் !

முதலில் ஏசுவை அழைத்தேன்
"சிலுவையில் அறைந்து
நான் பட்ட துன்பம் போதும் " - என்றார் !

புத்தரை அழைத்தேன்
மூடிய கண்களை திறக்காமல்
மௌனம் சாதித்தார் !

பிள்ளையாரை அழைத்தேன்
"தன் மூஞ்சுறுக்கு
நூறு பூனைப்படை காவலுக்கு" கேட்டார் !

முருகனை அழைத்தேன்
" தனக்கு ஆறுபடை வீடு போதும்" என்றார் !

சிவனை அழைத்தேன்
"தன் அழிக்கும் தொழிலை
தனக்கு பதிலாக மனிதர்கள் தொடர்கிறார்கள்" - என்றார் !

இறைவனிடம் உரையாடும் போது
குஜராத்தில் மீண்டும் கலவரமாம்
அங்கு எந்த இறைவனை அழைப்பது ?

அயோத்தி இடத்தை நிரப்பும் முயற்சியில்
என் கவிதையின் பக்கங்கள் மட்டுமே நிரம்பியது !
கலவரங்கள் முடியும் வரை
இந்த முடிவடையாத கவிதையின்
பக்கங்கள் நிரப்பப்படும் !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் 16வது கவிதை.

Tuesday, July 08, 2008

என் உயிர் தோழிக்கு...

கோயிலுக்குச் செல்லும் போது
என் காலணியை மட்டும் அல்ல......
என் தீய எண்ணங்களையும்
வெளியே விட்டே செல்கிறேன் !

உன்னிடம் பேசும் போது
காதலை மட்டுமல்ல......
காமத்தையும் மறந்தே
உன்னிடம் பேசுகிறேன் !

கோயிலுக்குள் தீய
எண்ணங்களுக்கு இடமில்லை !
ஆண் பெண் நட்புக்குள்
காமம் வருவதில்லை...!!

பேருந்து நிலைவரை
நம் நடைப் பயணத்தில்
"கடலை" என்று கூறும்
தூரத்து நண்பர்களின்
கேலிப் பேச்சுக்களும்.......

நம் நட்பை “காதல்” என்று
அரிதாரம் பூசும்
நம் வகுப்பு நண்பர்ளும்...

இவர்கள் பேச்சில்
மனமுடையும் போது
“அவர்கள் பேச்சை விட்டு தள்ளுடா” -
என்ற உன் வார்த்தைகளும்.

புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தேன்.......
என் சக வயதில்
இன்னோரு அன்னையை !

நீ எனக்கு பெண்ணல்ல
என் ஆண் நண்பர்களில் ஒருவன் !
நான் உனக்கு ஆண்ணல்ல
உன் பெண் தோழிகளின் ஒருத்தி !

ஒளவை அதியமான் நட்பு
ஆண் பெண் நட்பு உதாரணமா...!
நம் நட்புமட்டும்
இவர்களுக்கு ஏளனமா... !!

அன்றைய நட்பை
நாம் உதாரணம் காட்டினோம் !
நம் நட்புபை
நாளையத் தலைமுறை
உதாரணம் காட்டட்டும் !!

நினைவில் நின்ற நண்பர்களுக்கு...

(என் கையெழுத்து (ஆட்டோகிராப்) புத்தகத்தில் முன் பக்க கவிதை)

நாம் எதிர்பார்க்கவில்லை
சந்திப்போம் என்று !
நாம் எதிர்பார்க்கிறோம்
பிரியப்போகிறோம் என்று !
நான் எதிர்பார்க்கிறேன்
என்னை மறக்கமாட்டீர்கள் என்று !

தலைமுடி நரைத்தப் பிறகு
தலைமுறை ஒன்று கடந்த பிறகு
என்றோ ஒரு நாள் சந்தித்தால்...

நன்றாய் பழகினோம் என்று
நாம் பேசிய வார்த்தைகள்
நினைவில் இருந்தால்...
அன்று கூறுவோம் நம் நட்பு கடல் என்று

நம் நினைவுகளை
நெஞ்சில் பதித்துவிட்டேன்
என் கையெப்பப் புத்தகத்தில்
கையெழுத்து இடுங்கள் !

எங்கள் முகங்களை
நினைவில் நிருத்திக் கொண்டேன்
இருப்பினும் உங்கள்
புகைப்படங்கள் தாருங்கள் !

காலம் நினைத்தால்
மீண்டும் சந்திப்போம்
சரித்திரம் படைத்தவர்களாக !
நீங்கள் சரித்திரம் படைக்க
என் வாழ்த்துக்கள் !!
Free Web Counters
வந்தவர்கள்