Thursday, August 28, 2008

ஆத்திகன் நாத்திகம் பேசுகிறான்

கோவை குண்டு வெடிப்பின் போது
வராத மருதமலை முருகர் !
பாதிரியார் எரிக்கும் போது
வராத சிலுவை ஏசுநாதர் !
பாபர் மசூதி இடிக்கும் போது
வராத உருவமில்லாத அல்லா !
குஜராத் மதக்கலவரத்தில் உதவாத
இன்னும் சில கடவுள்கள் !
மனிதர்களின் மரணத்தின் போது
வராத கடவுள்
தனி ஒரு மனிதனின் வேண்டுதலுக்கு
வந்து விடவாப் போகிறார் !

நான் நாத்திகன் அல்ல
கடவுள் இல்லை என்று சொல்வதற்கு...
ஆத்திகன் தான்
இருந்தும்
நாத்திகம் பேசுகிறேன் !

மசூதிக்குச் செல்பவனும்
விபூதி பூசுபவனும்
பண்ணீர் ஏந்தி நிற்பவனும்
மனித நேய மனதை
மத வெறியில் எரிக்கின்றான் !

கீதை நாயகனோ !
கண்கள் மூடிக் கொண்டான்
கூரானின் நாயகனோ !
கடமை மறந்தான்
பைபிளின் நாயகனோ !
பார்த்துக் கொண்டு இருக்கிறான்
இறுதியில்
தீவிரவாதிகளிடம் இருந்து
தன் கோயிலைக்
காப்பாற்றத் தவறினான் !

நான் நாத்திகன் அல்ல
கடவுள் இல்லை என்று சொல்வதற்கு...
ஆத்திகன் தான்
இருந்தும்
நாத்திகம் பேசுகின்றேன் !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் 40வது கவிதை

Monday, August 25, 2008

எய்ட்ஸ் குழந்தை

என்றோ விடலை பருவத்தில்
தந்தை தவறு செய்தான் !
ஒன்றும் அறியாத தாயோ
அந்த தவறுக்கு இணங்கினாள் !
உடல் எடை கூடும் முன்
எய்ட்ஸ் நோயுடன் பிறந்து விட்டாய் !!

மொழிகள் வார்த்தை அறியும் முன்
எய்ட்ஸ் நோயால் புறக்கணிக்கப்பட்டாய் !
பால் குடிக்கும் பருவத்தில்
பால்விணை நோயால் அவதிப்பட்டாய் !
மண்ணில் வாழ்த் தொடங்கும் முன்
மரணத்தின் வாசல் தட்டத் தொடங்கிவிட்டாய் !!

அர்த்தமற்ற பிறப்பில்
முடிவைத் தேடி செல்கிறாய் !
ஓடி விளையாட முயலும் முன்
வாழ்வின் நாட்களை எண்ணுகிறாய் !

பெற்றோரின் பாவம் பிள்ளைக்கு
என்று இறைவன் வகுத்த நீதியாம் !
"தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க
அவர்கள் பிள்ளைகளுக்கும் அதே தண்டனை"
பால்வினை நோயின் நீதியாம் !

சுவரில் ஒட்டப்பட்டு இருந்தது
எய்ட்ஸ் நோயின் முடிவு மரணம் என்று !
எங்கோ கேட்டேன்
மனிதனின் முடிவும் மரணம் என்று !
யாரும் கூறவில்லை
மண்ணில் பிறந்தவுடன்
மனிதர்களால் மரண தேதி
குறிக்கப்பட்டவர்கள் 'இவர்கள்' என்று .....!!

- நான் எழுதிய் "உறங்காத உணர்வுகள்" நூலில் 17வது கவிதை

Thursday, August 21, 2008

கவிதையின் எதிரி

‘கவிதை’
என்பது பொய்யாம்
ஆதலால், கவிதைக்கு
உண்மை தான் எதிரி !

பொய்யெல்லாம்
உண்மையாகிவிட்டால் !
எழுதிய மையெல்லாம்
உண்மையாகிவிடும் !

காற்றோடு செல்லும் உடல்
கவிதை பாடும் குயில் !
மதுவின் மயக்கம்
மாதுவின் ஸ்பரிசம் !!

மரணத்தின் நடுக்கம்
மரணப்படுக்கை உறக்கம் !
பள்ளியில் வந்த முதல் சினேகிதம்
கல்லூரிக் காதல் கொடுத்த இன்பம் !!

முதல் முத்தம்.....
முல்லை தரும் சுகந்தம் !
தோழியுடன் நடைப்பயணம்
தோழர்களுடன் பேரூந்துப் பயணம் !!

மூன்றாம் பிறையாக
சித்தரிக்க படும் சூரியன் !
முத்திரை பொழுதில்
முழு நிலவாய் சந்திரன் !!

அழிகில்லாப் பதுமையை
அவதாரம் என்று அழைப்பது !
அவளின் கோழிக் கிறுக்கல்களை
கவிதை என்று வர்ணிப்பது !!

மரணத்தின் பின் வாழ வைப்பது
பிறக்கும் முன்பே உருவத்தை வடிவமைப்பது !

எல்லாம் சாத்தியம் கவிதையில்...
ஆனால்,
இந்த உண்மை
எட்டவில்லை சில பேர் மனதில் !

கற்பனைகள்
கவிதைக்குத் தீனிப்போடும் !
ஏதார்தங்கள்
எதிர்மறையாக சண்டைப்போடும் !

உண்மை கவிதைக்கு
தடை விதிக்கவில்லை !
உண்மையை உணர்ந்தவர்கள்
கவிதைப் பொய் என்றே கூறுகிறார்கள் !

கனவுகளே கவிதைக்கு விதையானது
கற்பனையே கவிதையின் எழுத்தானது !
விற்பனை ஆகும் போது காசானது
உண்மையே கவிதைக்கு எதிரியானது !!

Monday, August 18, 2008

அயல்நாட்டு மணவாளன்

இந்தியாவில் நதிகளுக்கு
கங்கை, யமுனை என
பெண்ணை புனிதப் படுத்தினான் !

அமெரிக்காவில் புயலுக்கு
கத்திரீனா, ரீடா
என்று பெண்ணின் பெயரை வைத்தான் !

பச்சை அட்டை வாங்கிய
அமெரிக்கா குடிப்போன
இந்திய குடிமகனை தேடுகிறாய் !
பச்சை வியர்வை சிந்தும்
பச்சை தமிழனை
மணவாளனாக ஏற்க மறுக்கின்றாய் !

நவ நாகரிகத்தை
உடையில் காட்டியவளே !
நவ நாகரிக நாட்டுக்கு
குடித்தனம் நடத்த நினைப்பவளே !
அன்னையின் அன்பை
அயல் நாட்டு மோகத்தில் மறந்தாய் !
பிறந்த வீடு , புகுந்த வீடு இரண்டும் இல்லாமல்
வேறு தேசம் குடி புகுந்தாய் !
வருடத்திற்கு ஒரு முறை
உன் பிள்ளைகளை
‘பேரன்’, ‘பேத்தி’ என்று சொல்லி
பெற்றோரிடம் காட்ட நினைக்கின்றாய் !

யாரும் ஆணையிடமாலே
உன் மணவாளனுடன்
உன்னை நீயே
நாடு கடத்திக் கொண்டாய் !

தேசம் தாண்டும் தமிழச்சியே
இறுதியாக ஒரு வேண்டுக் கொள்..!

தேசம் துறந்து சென்றவனுக்கு
உன்னை துறந்து செல்லாமல்
பார்த்துக் கொள் !!

'வசந்த வாசல் 2008 கவிதை தொகுப்பு' நூலில் நான் எழுதிய கவிதை.

Thursday, August 07, 2008

இப்படிக்கு காதல்...

அன்புள்ள இறைவனுக்கு,
உன்னால் படைக்கப்பட்ட காதல் எழுவது,
நான் இறக்கும் தருவாயில்
என் உயிரைக் காக்க விண்ணப்பக் கடிதம் !

அன்று -
தாஜ்மஹால் கட்டும் அளவிற்கு
காதல் புனித மானது !
இன்று -
மூன்று பெண்களைக் காதலிக்கும்
அளவிற்கு காதல் மொழுது போக்கானது !

அன்று -
காதலுக்காக உயிரையே கொடுத்தார்கள்
இன்று -
காதலியின் வயிற்றில் உயிரைக் கொடுக்கிறார்கள்.

அன்று -
மணந்தால் மகாதேவி
இல்லை என்றால் மரண தேவி !
இன்று -
கிடைத்தால் பத்மினி
இல்லை என்றால் ரோகினி !

அன்று - காதல் தெய்வீகமானது !
இன்று - காதல் சுயநலமானது !

இறைவா !
என் பெருமையை உணர்ந்த
அம்பிகாபதி அமரவாதியைப் படைத்துவிடு !
ஷாஜகானுக்கு உயிர் கொடுத்து
இன்னொரு தாஜ்மஹால் கட்ட உத்தரவிடு !
லைலா, மஜ்னுக்கு உயிர் கொடுத்து
காதலின் பெருமையை உணர்த்திவிடு !

காதலை புனிதப்படுத்தும்
ஷேக்ஸ்பியர் போன்ற எழுத்தாளர்களை
தரணியில் வாழவிடு !

இவர்கள் இறந்து என்னை பெருமை படுத்தினர் !
பலர் வாழ்ந்து என்னை காயம் படுத்துகிறார்கள் !

இன்னும் சில காதலர்களை கொடுத்து
என் சரித்திரப்பக்கங்கள் நிரப்ப வேண்டும்
இந்த நூற்றாண்டில்
நான் புனிதமாய் நடைபோட வேண்டும் !

- இப்படிக்கு,
காதல்.


- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் இருந்து 24வது கவிதை (2003)
Free Web Counters
வந்தவர்கள்